Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஒரே தலைமையாசிரியர் அரசின் முடிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள்


தமிழக அரசானது பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் புதிதாக ஒரு அறிவிப்பினை தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார் ஒரே பள்ளியின்  கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றிணைக்கும் புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியின் கீழே ஒன்றிணைக்க கூடிய இந்த புதிய அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நிர்வாகத்தின் கீழ் அனைத்து பள்ளிகளையும் ஒன்றிணைக்கும் இந்த முயற்சி சிறந்த ஒரு முயற்சியாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், நிர்வாகம் என்னும் வளையத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று நினைக்கும் பொழுது பள்ளியின் செயல்பாட்டை ஒரு தொய்வு ஏற்படுத்தும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர். 



தமிழக அரசின் கருத்தானது "ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பட்சத்தில் அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை ஆரம்பப் பள்ளி மாணவர்கள் பெறும் பொழுது அவர்களுடைய கல்வித்தரம் உயரும் என கூறப்பட்டுள்ளது". ஆனால், ஆசிரியர்கள் இது சாத்தியமே இல்லை என கூறுகின்றனர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆய்வகங்கள் அந்தந்த வகுப்பு மாணவர்கள் மட்டுமே முழுமையாக பயன்படுத்த இயலும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எவ்வாறு அந்த ஆய்வகங்களை பயன்படுத்துவார்கள். மேலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி யில் உள்ள ஆய்வக வசதியானது அந்த மாணவர்களுக்கு முழுமையாக பயன்படுத்த வசதி இல்லாத சூழ்நிலையில் இவர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என வினவுகின்றனர். 

இதுகுறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலச்சந்தர் கூறுகையில் “தொடக்க கல்வித் துறை என்பது கல்வியின் அடிப்படையைக் கற்றுக் கொடுக்கக்கூடிய இடமாகும். அதற்காகத்தான் தொடக்கக் கல்வித் துறைக்காகத் தனியாக நிர்வாகக் கட்டமைப்புகள் வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதன் மூலமாகவும், போராட்டங்கள் நடத்தியதன் வாயிலாகவும்தான் தற்போது அது தனியாகச் செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அதில் ஏதாவது குறைபாடுகள் இருக்கும்பட்சத்தில் அரசு அதில் தலையிட்டு தீர்வுகாணாமல், அடிப்படைக் கல்வியைச் சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே, 'ஒரே தலைமை ஆசிரியர்' என்ற இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதுபோல் இருக்கிறது, அரசாங்கத்தின் செயல்பாடுகள்.

இது தொடர்ந்தால் தமிழகத்தில் தொடக்கக் கல்வி என்பதே அழிவை நோக்கியதாகத்தான் நகரும். எனவே, தொடக்கக் கல்வித் துறைக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் தற்போது நாங்களும் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளோம். இந்நிலையில் இந்தத் திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்துவதால் எந்த நன்மையும் கிடைக்காது. பல தீமைகள்தான் ஏற்படும்.

இதுதொடர்பாக தற்போது வெளியாகியுள்ள அரசாணையில் நன்மையாக என்ன சொல்லப்பட்டுள்ளது என்றால், ஓர் ஈராசிரியர் பள்ளி இருந்தால் அங்கு தலைமையாசிரியரும் உடன் மற்ற ஆசிரியரும் செயல்பட்டு வருவார்கள். இந்தப் பள்ளிகளில் ஒருவேளை தலைமை ஆசிரியர் அலுவல் காரணமாக வெளியே போகும்பட்சத்தில் அப்போது மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படும். எனவே, அந்தப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்தப் புதிய நிர்வாக மாற்றத்தின்மூலம் அந்த இடத்துக்கு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை நியமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது மாதிரியாக மேல்நிலைப் பள்ளி ஆசிரியரைத் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பார்த்துக்கொள்ள நியமிப்பதால், அதில் எந்தப் பயனும் கிடையாது. ஏனெனில், மேல்நிலைப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு; தொடக்கப் பள்ளிகளுக்குக் கற்பிக்கும் முறை வேறு என்பதை உணர்தல் வேண்டும்.



மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களால் தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பேசாமல் அமைதியாகப் பார்த்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களுக்குப் பாடத்தை நடத்த இயலாது. கடந்த 10 ஆண்டுகளாகக் கல்வி என்பது கீழ்த்தரமான நிலையை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்ந்தால், தமிழகம் பழைய மாதிரி கல்வியறிவு இல்லாத மாநிலமாகத்தான் மாறும்” என்றார்.கல்விப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை. இல்லையேல், பாதிக்கப்படப்போவது என்னவோ ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிதான்
ஒரே தலைமையாசிரியர் அரசின் முடிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் ஒரே தலைமையாசிரியர் அரசின் முடிவால் ஏற்பட இருக்கும் பாதிப்புகள் Reviewed by Rajarajan on 29.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை